? ????????????????????????????????????????? ????Easy Install Instructions:???1. Copy the Code??2. Log in t
o your Blogger account and go to "Manage Layout" from the Blogger Dashboard??3. Click on the "Edit HTML" tab.??4. Delete the code already in the "Edit Template" box and paste the new BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS ?

Tuesday 11 August, 2009

பார் காலம் 02 : ஒருநாள் கமல்ஹாசனாகிய நான்..!

பார் காலம் அனுபவத் தொடரில் 20 அல்லது 21 ஆவது அத்தியாயத்தில் எழுதலாம் என்று எண்ணியிருந்த நிகழ்வை, 02-வது அத்தியாயத்திலேயே கட்டாயம் என்ன?

சூழல்...

கமல்ஹாசனின் திரையுலக பொன்விழா ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 12-ல் தொடங்குகிறதல்லவா? அதான்!

***

இந்த அனுபவத் தொடர் குறித்த அறிமுகத்துக்கு... பார் காலம் : எழுதுவதற்குமுன்னால்...


***

'இவனுக்கும் கமல்ஹாசனுக்கும் என்ன தொடர்பு?' என்று நீங்கள் புருவத்தை உயர்த்துவதில் நியாயம் உள்ளது.


முதலில் கமல்ஹாசன் என்றாலே என் மனத்தில் அன்னிச்சையாக தோன்றி மறையா சினிமா காட்சியை விவரித்துவிடுகிறேன்.

ஒன்று... 'சிப்பிக்குள் முத்து' படத்தில் தனது நாக்கை வெளியில் நீட்டி மழையைச் சுவைக்கும் அற்புதக் காட்சி...

இரண்டு... 'அபூர்வ சகோதரர்களில்' அம்மாவாலேயே சிறுமைபடுத்துகையில் உண்டாகும் உணர்வுகளின் வெளிப்பாடு...

இப்படி அடுக்கத் தொடங்கினால் எளிதில் ஓர் ஆய்வறிக்கை தயார் செய்து விட சாத்தியமுண்டு.


*

சரி. விஷயத்துக்கு வருகிறேன்.

பாரில் வெயிட்டராகி 2 வருடங்கள் ஓடிவிட்ட காலம். ஓட்டலில் சுரேஷ், 'பார்' சுரேஷ் என்றால் அறிந்திடாதோர் எவருமில்லை என்ற பெருமைக்குரிய நாட்கள்!!!

அன்றொரு நாள்...

இரவு 7 மணி. பாரில் பிஸியாக இருந்தபோது, சக ஊழிய நண்பர்களால் ஒரு தகவல் கிடைத்தது.

"ஏழாவது மாடியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கமல்ஹாசன் வருகிறார்."

குஷி. ஏற்கெனவே பல தருணங்களில் கமல்ஹாசனைப் பார்த்திருந்த போதும் அன்பே சிவத்தை தரிசித்த சில நாட்களில் கமல்ஹாசனை நேரில் காணும் வாய்ப்பு சற்றே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

ஃபிரண்ட் ஆஃபிஸ், ரிசப்ஷன் ஃபோன் போட்டேன்.

"ஹாய் அலெக்ஸ். திஸ் இஸ் சுரேஷ்,"

" சொல்லு மச்சி"

"கமல் வராராமே?"

"ஆமா... உன்ன பாக்கதான் வர்றார்!"

"ஓவரா பேசாத. கமல் லிஃப்ட்ல ஏறினதும் கால் பண்ணு. போய் பாக்கணும்."

"சரி. ஸ்நாக்ஸ் உஷார் பண்ணி வை."

"ம்"

*

"சுரேஷ்.. கால்." கேப்டன் சந்திரன் அழைத்தார்.

"ஹலோ"

"டேய் கமல் வந்தாச்சுடா."

"தேங்க்ஸ்டா"

சிலிர்ப்பு. மீண்டும் மீண்டும் சிலிர்ப்பு.

லிஃப்டில் ஏறப் போனேன். ஓட்டலின் பின்புறம் பணியாளர்களுக்கான லிஃப்ட் உள்ளது. முன்புறம் இருப்பது கெஸ்ட்களுக்கானது. நான் வழக்கம் போல் செல்ல முற்பட்டது, பணியாளர்களுக்கான லிஃப்ட்.

அது பார் ப்ரைம் டைம். இரவு 7.30 மணி. படு பிஸியாக இருக்கும் நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் கமல்ஹாசனைப் பார்த்துவிட வேண்டிய கட்டாயம்.

என் நிலை புரிந்திடாத லிஃப்ட், 6-வது மாடியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஏழெட்டு தடவை பட்டனை அழுத்தியும் பலனில்லை.

'சரி, இது வேலைக்கு ஆவாது. என்ன ஆனாலும் பரவாயில்லை. கண்டிப்பா இந்த நேரத்துல மேனேஜர் எவனும் இருக்க மாட்டாணுங்க. ரிசப்ஷன் போயிட்டு லிஃப்டுலயே போயிடலாம்,' என்று நொடிப் பொழுதில் தீர்மானம் நிறைவேற்றி, அதைச் செயல்படுத்தவும் செய்தேன்.

லிஃப்டில் ஏறிவிட்டேன்.

1... 2... 3... 4...

7

மின்னல் வெளிச்சம் பீறிட்டது... கேமரா கண்கள் ஒளிர்ந்தன... ஒரே ஃப்ளாஷ் மயம்... என் மீது!!!!

கூடவே கரவொலிகள் வேறு!!!

இதெல்லாம் சரியாக 5 முதல் 6 நொடிகள் மட்டும்!

விக்கித்து நின்றேன்!!!!!!

நான் வந்த லிஃப்டைச் சுற்றிக் குழுமியிருந்த கூட்டம் அமைதியாகி பின்னர் எனைப் பார்த்துச் 'சிரிக்க'த் தொடங்கியது.

பார் யூனிஃபாமில் இருநூறு பேரால் காமெடி பீஸ் ஆன தருணம் உடனடியாக அவமான உணர்வைக் கொடுத்ததில், தேவையற்ற புன்னகையையை உதிர்த்துக் கொண்டே அவ்விடத்தில் இருந்து எஸ்கேப் ஆனேன்!

விஷயம் இதுதான்...

மேலே காத்திருந்தோருக்கு கமல்ஹாசன் லிஃப்டில் வருகிறார் என்று தகவல் அனுப்பட்டிருந்த நிலையில், கீழே கமல்ஹாசன் லிஃப்டில் ஏறுவதற்கு சற்றே முன்பு நான் ஏறிக் கொண்டேன்.

7 ஆவது மாடியில் லிஃப்ட் திறந்த போது, கமல்ஹாசன் என்று நினைத்து என் மீது ஃப்ளாஷ், மின்னல், வெளிச்சம், ஆர்ப்பாட்டம், இன்னபிற!

அன்று கமல்ஹாசனைப் பார்க்கவில்லை. பார்க்க மனமில்லை. ஒருவித கூச்ச உணர்வு மட்டுமே படர்ந்திருந்தது.

கீழே பாருக்கு வந்து வழக்கமாக இயங்கத் தொடங்கினேன்.

மேலே நடந்த சம்பவம், சரியாக ஓபன் பண்ணத் தெரியாதவனால் ஓபன் பண்ணப்படும் பீராக ஓட்டல் முழுவதும் பொங்கி வழிந்தது.

அன்று முதல் சில தினங்கள் என்னை எனது சக ஊழிய நண்பர்கள் இப்படித்தான் அழைத்தார்கள்...

"வாப்பா... ஒன் டே கமல்ஹாசன்!"

(அப்போது வெட்கப்பட வைத்த அந்த அனுபவ நிகழ்வு, இப்போது மகிழ்வூட்டுவதை உணர்கிறேன். விருமாண்டி சொல்வார்... "சந்தோஷங்கிறது அதை அனுபவிக்கும் போது தெரியாது...")

Monday 3 August, 2009

பார் காலம் 01 : உலகின் சுவை மிகுந்த டின்னரை சாப்பிட்ட தருணம்

மூன்று நட்சத்திர கேட்டகரி ஓட்டலின் செக்யூரிட்டி கேட் பகுதியில் நின்று கொண்டிருக்கிறேன். வெறும் 2 மணி நேரம்தான்.

மேனஜரிடம் இருந்து அழைப்பு வரவில்லை. மணி பிற்பகல் 4.30 இருக்கும். மேனேஜர் என்று சொல்லப்பட்டவர் பைக்கில்

கிளம்பிக் கொண்டிருந்தார். செக்யூரிட்டியில் ஒருவரான கார்த்தி அண்ணன் என்பவர், "டேய் ... அவர்தாண்டா மேனேஜர்.

போய் பேசு உடனே.."

சட்டென மேனேஜர் அருகே சென்று நின்றேன்.

"சார் நான் சுரேஷ்..." (என் பெயர் இங்கே மட்டுமல்ல.. எங்கேயும் மாற்றப்படுகிறது)

"சொல்லுப்பா.. "

"சார் நான் இங்கிலீஷ் லிட்டரேச்சர் செகண்ட் இயர் படிக்கிறேன். மார்னிங் நைன் டூ டூ வரைக்கும் தான் காலேஜ். மீதி

நேரத்துல ஃப்ரீதான். எனக்கு வேலை வேணும். சர்வீஸ்ல வேலை இருக்குமான்னு கேக்க வந்தேன்," முதல் முறையாக

வேலை கேட்கும் அனுபவம் என்பதால் உளறல் சரளமாக இருந்தது.

மேலும் கீழும் பார்த்தவர், "சாரிப்பா... சர்வீஸ்ல வேக்கண்ட் இல்ல. வேணுன்னா... ஹவுஸ் கீப்பிங்ல டிரை பண்ணு.

கார்த்தி... இவரை ஹவுஸ் கீப்பிங் மேம் கிட்ட அனுப்புங்க." என்று கூறிவிட்டு பைக்கில் பறந்தார்.

----

இந்த அனுபவத் தொடர் குறித்த அறிமுகத்துக்கு... பார் காலம் : எழுதுவதற்கு முன்னால்...
----

மழை.

எப்போதும் மழை என்றால் பிடிக்கும். பள்ளிக்குச் செல்லும் போது மழை வெறுக்கும் மனம், அங்கிருந்து திரும்புகையில்

வெகுவாய் விரும்பும்.

ஆனால், அன்றைய மழை வெறுப்பையேத் தந்தது.

பசி, காசில்லை, அடுத்து எந்த நண்பனிடம் நூறு ரூபாய் கொடுக்காக் கடன் வாங்கலாம் என்ற சிந்தனை, ஹவுஸ் கீப்பிங்

வேலையாவது கிடைக்க வேண்டுமே என்ற ஏக்கம்...

அழகையும் ரசனையையும் முழுமையாய் வெறுத்து ஒதுக்க வைக்கும் மிகப் பெரிய சக்தி, வறுமைக்கும் பசிக்கும் உண்டென

உணர்ந்தேன்.

*

என் முன்னால் ஹவுஸ் கீப்பிங் மேடம் சுகுணா.

"ஹவுஸ் கீப்பிங் வேலைன்னா என்னன்னு தெரியுமாப்பா?"

"எதுவா இருந்தாலும் கத்துகிட்டு செய்வேன் மேடம்."

"இதோ பாரு... இப்படி 'மாப்' போடணும்." அங்கே மழையால் புகுந்திருந்த தண்ணீரை மாப்பினால் துடைத்துக்

கொண்டிருந்தார், ஒரு மூத்த ஹவுஸ் கீப்பர்.

"இது மட்டும் இல்ல. பெருக்கணும், துடைக்கணும், ரூம் க்ளீன் பண்ணனும், பாத்ரூம் டாய்லெட்டல்லாம் க்ளீன்

பண்ணனும்... நீ ஏதோ டிகிரி செகெண்ட் இயர் படிக்கிறேன்னு சொன்னாங்க. இந்த வேலையெல்லாம் செய்வியா?"

"செய்வேன் மேம்."

நிதானமாக என் முகத்தைப் பார்த்தார். ஒரு நடத்தர வயது பெண்ணின் கண்கள் சந்தேகக் குறியுடன் என்னை சில நொடிகள்

பார்த்ததில் இயல்பற்று நின்றேன்.

"சரி. எப்ப ஜாயின் பண்ற?"

"நாளைக்கு ஈவ்னிங்."

"ஓகே.. வா. எப்படி.. என்ன பண்ணனும்னு சூப்பர்வைசர் சொல்லித் தருவாரு."

"தேங்ஸ் மேம். மேம்... ஆஃப்டர்நூன் த்ரீ ஓ க்ளாக்தான் வர முடியும்."

"பரவாயில்லை. த்ரீ டூ லெவன் டியூட்டி. சேலரி ஒன் த்ரீ (ரூ.1,300) ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன்."

"தேங்ஸ் மேம்."

ரெசஷன் காலத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு கொடுத்தால், ஓர் ஐ.டி. நண்பர் எவ்வளவு சந்தோஷப்படுவார்...? அதைக் காட்டிலும் நூறு மடங்கு மகிழ்வு என்னில்.

*

முதல் நாள் வேலை.

தண்ணீரையும் சோப்பையும் பார்த்து பத்து நாட்களுக்கும் மேலான யூனிஃபார்ம் கொடுக்கப்பட்டது. மெல்லிய தேகம் என்பதால் லூஸாக இருந்தது. பட்டன் இல்லாத பேன்ட். ஒரு வழியாக மாட்டியாகிவிட்டது. முதலில் தரப்பட்ட வேலை. ஏழு மாடிகளில் உள்ள படிக்கட்டுகளின் பொன்னிற கம்பிகளைத் துடைக்க வேண்டும். எனக்குக் கொடுக்கப்பட்ட இரு துண்டுகளை வைத்துக் கொண்டு கம்பிகளை வேக வேகமாக எண்ணத் தொடங்கினேன். மதியம் சாப்பிடவில்லை. மாலை 5க்கே பசிப் புடுங்கியது. முதல் நாள் வேலையாயிற்றே... முழுவீச்சில் செய்துகொண்டு 5வது மாடியை அடைந்த போது மணி 7 ஆனது.

கேன்டீனில் 7.30 மணிக்கெல்லாம் டின்னர் வந்துவிடும் என்று என் வயதையொத்த சக ஹவுஸ் கீப்பர் செந்தில் தகவலளித்திருந்தார்.

மணி 7.40 ஆகியும் போகவில்லை. யாராவது சீனியர் சொல்லட்டும்; போய்க் கொள்ளலாம் என்ற முதிர்ச்சி சிந்தனை!!??

மணி 8.20க்கும் மேல். 6வது மாடியை அடைந்த போது சுகுணா மேடம் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். என்னைக் கடந்து சென்றவர், "சுரேஷ் சாப்பிட்டியா?"

"இல்லை மேம்"

"போங்க கேண்டீன் போய் சாப்ட்டு வாங்க."

அந்த வாக்கியத்தை உதிர்த்ததாலேயே, சுகுணா மேடம் எனக்கு அப்போது தேவதையாக காட்சியளித்தார்.


*

உலகிலேயே சுவையான உணவு எது? எப்போது சாப்பீட்டீர்கள்? என்று கேட்கப்பட்டால், பெரும்பாலும் 'அம்மா' சமைத்து அளித்தது தான் என்று பலரும் பதிலளிப்பதைக் கேட்டிருக்கிறேன்.

ஆனால், என்னைக் கேட்டால்...

அரைகுறையாக இரு வேளை சாப்பிட்டு விட்டு, அதுவும் கேன்டீன் போய் பே பண்ணும் பக்குவம் உள்ள நண்பனுடன் தவறாமல் மதிய உணவு என்ற பெயரில் ஒரு கிண்ண அளவில் பிரிஞ்சி சாப்பிட்டுவிட்டு வந்து, இரவு உணவுக்கு 8.20 மணி வரை காத்திருந்த எனக்கு, அந்தக் கேண்டீனில் கொடுக்கப்பட்ட ஆறிய சோறும் சூடான காரக்குழம்புமே உலகின் சுவையான உணவு என்பேன், தயங்கமால்.

*

பார் வெயிட்டர் பதவி கிடைப்பதற்கு முன்னர் 2 மாத காலம் ஹவுஸ் கீப்பராக இருக்க வேண்டியதாகிவிட்டது. ஹவுஸ் கீப்பராக இருந்தபோது, எனது மன நிலை எப்படி இருந்தது..? அடுத்த அத்தியாயத்தில் விரிவாக எழுதலாம் என்று எண்ணியிருக்கிறேன்.

*

Thursday 30 July, 2009

'பார்' காலம் : எழுதுவதற்கு முன்னால்...


பார்... இங்கே BAR எனப் பொருள் கொள்ளப்படுகிறது.

எனது வாழ்வில் தவிர்க்க முடியாததோர் இடம். எனக்கு ஐந்து ஆண்டு காலம் உணவு, உடை, உறைவிடம் அளித்த இடம், இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் படித்து முடிக்க பொருளாதார உதவியைச் செய்த இடம், சில முக்கிய நட்புகளை அறிமுகப்படுத்திய இடம், எல்லாவற்றுக்கும் மேலாக வாழ்வனுபவத்தை ஓரளவு கற்பித்த இடம்.

சென்னையில் உள்ள மூன்று நட்சத்திர வகையறா ஓட்டல் பாரில் ஐந்து ஆண்டு காலம் வெயிட்டராக பணிபுரிந்த பேரனுபவம் எனக்குண்டு.

அன்பு, அறிவு, அனுபவம், நட்பு, மேன்மை, பொறாமை, துரோகம், ஏமாற்றம், லட்சியம், அலட்சியம், மோசம், நாசம், வேஷம்...

இப்படி வாழ்க்கையில் அங்கம் வகிக்கும் ஒற்றைச் சொற்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவையனைத்தையும் ஒருங்கே பெற்ற இடம் தான், அந்த மதுபான சேவையளிக்கும் பார்.

இப்போது, சமூகத்தில் ஏதோ ஒரு பொறுப்புள்ளவனாக இருக்கிறேனென்றால், அதற்குக் காரணம் அந்த பார் அனுபவமும் முக்கியமானது.

மிகச் சுலபமாக எவருக்கும் கிடைத்திடாத களம் அது. அத்தகைய களத்தில் பார்வையாளனாக அல்லாமல் பணியாளனாகவும் இருந்துள்ளதால், ஓரளவு அனிச்சையாகவே பல நிகழ்வுகள் என் மனத்தில் பதிந்துவிட்டிருந்தன. குறிப்பாக, மனிதர்களை என்னால் படிக்க முடிந்தது. ஒவ்வொரு மாறுபட்ட சம்பவங்களும் ஒவ்வொரு அனுபவத்தையும், புரிதலையும் தந்தன.

ஆண்டுக்கொரு முறை மது அருந்துபவரில் இருந்து ஆண்டுக்கொருநாள் முறை மது அருந்துவதை தவிர்க்க முற்படும் மனிதர்கள் வரை எத்தனை விதமான மனிதர்கள்.

அந்தக் களத்தில் வாழ்ந்துவிட்டதால், அந்த அனுபவத்தை அசை போட்டு 'நாவல்' ஒன்றை எழுதாலாமே என்று எண்ணியிருந்தேன். நாவல் என்ற இலக்கிய வடிவத்தை பயன்படுத்தும் அளவுக்கு என்னிடம் எழுத்தாற்றல் இல்லை என்பது தெளிவு.

நாளுக்கு நாள் பிரச்னைகளும் நாட்டங்களும் மாறி மாறி ஆட்கொள்வதால், எனது 'பார்' காலம் கால மாற்றத்தால் அல்ஸீமர் நிலையை அடைந்துவிடுவோமோ என்ற அச்சம் ஏற்பட்டதன் பலனாகவே இங்கே எனது பார் காலத்தை பதிவு செய்ய முனைந்துள்ளேன்.

எழுத்து நடை வசீகரிக்காமல் போனாலும், நான் சந்தித்த அனுபவம் உங்களுக்கு சுவாரசியத்தைக் கொடுக்கும் என்பதால் இதைத் தொடர்ந்து படிக்கும் விழைவு ஏற்படக்கூடும் என்று நம்புகிறேன்.

விஷயம் இதுதான்...

சென்னையில் கல்லூரி ஒன்றில் இளங்கலை இரண்டாமாண்டு செல்லத் தொடங்கியபோது, சாப்பாட்டுக்கும் படிப்புக்கும் பகுதி நேர வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கிடைத்த வேலை... மூன்று நட்சத்திர வகையைச் சேர்ந்த ஓட்டலின் 'பார் வெயிட்டர்' போஸ்ட். இந்த வேலையின் நேச்சர் காரணமாக, படிப்பு பார்ட் டைம் ஆனது... வேலை ஃபுல் டைம் ஆனது!

காலை 9 மணி முதல் 2.00 மணி வரை காலேஜ், மதியம் 2.00 மணி முதல் 12.00 மணி வரை பார். இப்படித்தான் 5 ஆண்டு காலம் சென்றது.

"ஐயோ பாவம்... படித்துக் கொண்டு, நண்பர்களுடன் ஹாயாக ஊர் சுற்றி வாழ்க்கை என்ஞ்சாய் பண்ணும் சூழலில், இப்படி கஷ்டப்பட்டிருக்கிறானே..!" என்று யாரும் 'உச்'சுக் கொட்டிவிட வேண்டாம். அந்த அற்புதமான, மகிழ்ச்சிகரமான, மேன்மையான, சந்தோஷங்கள் நிறைந்த வாழ்க்கையை அணுஅணுவாய் அனுபவித்தவன் நான்!

*

அந்த ஓட்டலில் சேர்ந்த நாள் முதல் கடைசியாக விலகல் கடிதம் கொடுத்த நாள் வரை என் நினைவில் இருக்கும் சுவாரசிய (சுவாரசியம் என்று நான் கருதுவதை) அனுபவங்களை அடுத்தப் பதிவு முதல் பதிவு செய்ய போகிறேன்.
அது எத்தனை அத்தியாங்கள் வரைச் செல்லும் என்பது எனக்குத் தெரியாது.
அதேபோல் எவ்வளவு நாள் இடைவெளியில் எழுதுவேன் என்றும் என்னால் வரையறுத்துக் கூற முடியாது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார் கால அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வேன்.

அது... பலருக்கும் புது அனுபவமாக இருக்கும் என்றே நம்புகிறேன்!